இங்கிலாந்தின் க்ளோசெஸ்டர் நகரம் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்களால் நிறுவப்பட்டது. மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த நகரத்தில் நீங்கள் ஒரு பாறையை நகற்றினால் கூட அங்கு எதையாவது கண்டுபிடிப்பீர்கள். 'கால் வைக்கும் இடம் எல்லாம் கண்ணி வெடி' என்பது போல நீங்கள் கால் வைக்கும் இடத்தில் வெறும் மூன்று இன்ச் கீழே தோண்டினாலும் கூட பழங்காலத்தைச் சேர்ந்த ஏதாவது ஒன்றினை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.
க்ளோசெஸ்டர் நகரத்தில் கைவிடப்பட்ட "டெபன்ஹம் சூப்பர் மார்க்கெட்" ஒன்று உள்ளது. அதனை மறு வடிவமைப்பு செய்ய பணிகள் துவங்கிய போது தான் யாராலும் நம்ப முடியாத அளவிற்கு எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. உடனே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டு அவ்விடத்தை முழுமையாக ஆராய்ச்சி செய்ய தொடங்கினர். அதில் 300க்கும் மேற்பட்ட நபர்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன.
இங்கு கண்டுபிடிக்கப்பட்டவை எலும்பு கூடுகள் மட்டுமல்ல. புகையிலை குழாய் மற்றும் மது பாட்டிலின் துண்டுகள் போன்ற கலைப் பொருட்களும் இருந்தன. இவை உட்பட ரோமானிய காலத்தைச் சேர்ந்த பல முந்தைய கலைப் பொருட்களும் வெளிவந்தன. இதன் மூலம் இப்போது இருக்கும் 'கிங்ஸ் ஸ்கொயர்' இடம் ஒரு காலத்தில் பண்டைய ரோமானிய நகரத்தின் வடகிழக்கு பகுதியாக இருந்திருக்கலாம் என்று நமக்குத் தெரிய வருகிறது.
சேகரிக்கப்பட்ட எலும்பு கூடுகளின் பற்களை ஆய்வு செய்தபோது, அக்கால மக்கள் அதிக சர்க்கரை கொண்ட உணவை உட்கொண்டிருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். மேலும் இவைகள் சாதாரணமாக புதைக்கப்படவில்லை. தலைகள் துண்டிக்கப்பட்டு, பின்னர் தலைகளை கால்களுக்கு இடையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எலும்பு கூடுகளைப் பற்றி மேலும் விவரங்கள் சேகரிக்க முடியவில்லை என்றாலும் இவைகளுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை இவைகள் எதுவுமே புதைகுழிகளில் புதைக்கப்படவில்லை. அப்படி என்றால் இவர்கள் யார்? ஏன் இவர்கள் புதைகுழிகளில் புதைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
இது குறித்து காட்ஸ்வோல்ட் தொல்லியல் மூத்த திட்ட அதிகாரி கிளிஃப் பேட்மேன் கூறியது,"ஒவ்வொரு முறையும் நாங்கள் க்ளோசெஸ்டரில் பணிபுரியும் போது, நாங்கள் புதிய கண்டுபிடிப்புகளை சேகரிக்கிறோம். இது மிகவும் முக்கியமான இடம்" என்றார்.
2023 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கியதிலிருந்து, மட்பாண்டங்கள், 83 செங்கல் புதைகுழிகள் (1950 களின் நடுப்பகுதியில் அகற்றப்பட்டவை), ஒரு டவுன்ஹவுஸில் இருந்த ஒரு சுவரின் அடித்தளங்கள் ஆகிய அனைத்தும் 2 ஆம் நூற்றாண்டை குறிப்பிடுகிறது.
க்ளோசெஸ்டரின் "டெபன்ஹம் சூப்பர் மார்க்கெட்டில்" முதன்முதலில் மறுவடிவமைக்கப்பட்டபோது மறைந்த இடைக்கால தேவாலயத்துடன் தொடர்புடைய புதைகுழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. பன்னிரண்டு நபர்களின் எலும்புகள், அவற்றின் கல்லறைகளில் மீண்டும் புதைக்கப்படுவதற்கு முன்பு ஆராய்ச்சிக்காக தோண்டியெடுக்கப்பட்டன.
டெபென்ஹாமின் அடித்தளத்தில் ரோமானிய கட்டிடங்களின் மொசைக்குகள் மற்றும் இடிபாடுகளை ஏற்கனவே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பதனால் இது போன்ற எலும்பு கூடுதல் கண்டெடுப்பது அவர்களுக்கு புதிதல்ல.
டெபன்ஹம் சூப்பர் மார்க்கெட்டின் மறு சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் சேகரிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளின் எச்சங்களையும் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் சிட்டி வளாகத்திற்கு வருபவர்கள் என மக்களின் பார்வைக்காக திறக்கப்பட உள்ளன என்று காட்ஸ்வோல்ட் தொல்லியலின் செயல் முதன்மை மேலாளர் ஸ்டீவ் ஷெல்டன் கூறினார்.