நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்த செய்தி பலருக்கும் தெரிந்திருக்கும். அதற்குப் பிறகு இருவரும் இன்று வரை சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை. மனைவியை பிரிந்த பிறகு ஜெயம் ரவி தன்னுடைய பெயரை 'ரவி மோகன்' என்று மாற்றிக் கொண்டு, அனைவரும் என்னை ரவி மோகன் என்ற பெயரை வைத்தே அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஏன் விவாகரத்து?
ரவி மோகன் தன்னுடைய மனைவியைப் பற்றிய குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்திலும் ஓரிரண்டு யூடியூப் சேனல்களிலும் கூறியிருந்தார். மனைவி ஆர்த்தி தன்னை சுதந்திரமாக எந்த முடிவுகளையும் எடுக்க விடுவதில்லை என்றும், வரவு செலவுகள் அனைத்துமே ஆர்த்தியின் அம்மா தான் பார்த்துக் கொள்கிறார் என்றும், அதிகமாக சந்தேகப்படுகிறார் மற்றும் இதுவரை தனக்கென்று சுயமான வங்கி கணக்கு கூட இல்லை என்றும் தனது குமுரல்களை தெரிவித்திருந்தார்.
அதற்குப் பிறகு சமூக வலைதளங்களில் அனைவரும் ஆர்த்தி ரவியை தாக்கி பேசவில்லை என்றாலும் ஜெயம் ரவிக்கு ஆதரவு தெரிவிக்கும் படியான பதிவுகளையே அனைவரும் பதிவிட்டிருந்தனர். "பாவம்யா, மனுஷன் ரொம்ப நொந்து போயிட்டாரு. இனியாவது வாழ்க்கையில சந்தோஷமா இருக்கட்டும்" என்றபடி பாசிட்டிவாக மக்கள் கருத்துக்களை பெற்று வந்தார். ஆனால் அன்று ஜெயம் ரவியை பார்த்து பாவப்பட்டவர்கள் அனைவரும் சமீபத்தில் அரங்கேறிய நிகழ்வுக்குப் பிறகு ரவிக்கு எதிராக திசை திரும்பி விட்டனர்.
யார் இந்த கெனிஷா?
கெனிஷா ஃப்ரான்சிஸ் ஒரு பாடகர். பல கான்சர்ட்களில் இவர் பாடல்கள் பாடியுள்ளார். தமிழில் முதல் முறையாக சென்ற வருடம் ரிலீஸ் ஆன ரவி மோகன் நடித்த "பிரதர்" திரைப்படத்தில் "இதை யார் சொல்வாரோ" என்ற பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதுதான் கெனிஷா மற்றும் ரவி மோகன் இருவரும் அறிமுகம் ஆகினர். அதற்கு பிறகு நடந்தவை எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
கெனிஷா ஒரு ஸ்பிரிச்சுவல் ஹீலர் (spiritual healer) என்பதால் ரவி மோகன் கெனிஷாவின் உதவியை நாடினார். அதன் பிறகு மனம் தெளிந்த ரவி மோகன் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். அதற்கு ஆர்த்தி மறுக்கவே தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து அறிக்கை விடுத்துள்ளார்.
"கெனிஷாவுடன் தொடர்பு இருப்பதால் தான் ஆர்த்தியை நீங்கள் விவாகரத்து செய்கிறீர்களா" என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பியதற்கு கடுப்பான ரவி மோகன், "கெனிஷா ஒரு
ஹீலர். அவங்கள அப்படி எல்லாம் சொல்லாதீங்க" என்று கொந்தளித்ததோடு இருவரும் சேர்ந்து ஹீலிங் சென்டர் நடத்தப் போவதாகவும் கூறியிருந்தார்.
திருமணத்தில் பங்கேற்ற கெனிஷா மற்றும் ரவி மோகன்
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணம் சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் திரை உலக பட்டாளமே கலந்து கொண்டன. நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், அமலா பால் மற்றும் ஷிவானி நாராயணன் வரை பலரும் கலந்து கொண்டனர். இதில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் கலந்து கொண்டார். அதுவும் சாதாரண உடையில் அல்ல. இருவருமே கோல்டன் கலர் உடையில் மேட்சிங்காக வந்திருந்தனர். இருவரும் கைகோர்த்துபடியே ஜோடியாக கிளம்பிச் சென்றது தான் ஹைலைட்.
இந்த காட்சியை கண்டதும் மக்கள் அனைவரும் கொந்தளிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் வெறும் ஃப்ரெண்ட் என்று சொல்லிவிட்டு இப்போது ஜோடியாக அதுவும் மேட்சிங் உடையில் பப்ளிக்காக வந்தது அனைவரையும் கடுப்பேத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக நடிகர் ரவியின் மனைவி ஆர்த்தி மிகவும் உருக்கமாக கடிதம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆர்த்தி ரவியின் பதிவு
ஆர்த்தி வெளியிட்ட கடிதத்தில், "இதுவரை நான் கட்டிக்காத்த மௌனத்தை இப்போது கலைக்கிறேன். என் குழந்தைகளுக்காக கடந்த ஒரு வருடமாக இந்த விஷயத்தில் நான் மௌனத்தை விரதமாகவே கடைபிடித்து வருகிறேன். அதனால் நான் பலவீனமானவர் என்று அர்த்தம் அல்ல. எனது குழந்தைகளின் அமைதியான வாழ்க்கையே முக்கியம் என்று கருதி தான் மௌனமாக இருந்தேன். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்தேன். ஆனால், இப்போது உலகம் எது உண்மை என்று தெளிவாக பார்க்கிறது" என்றார்.
மேலும்," என் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்று நீங்கள் செய்த சத்தியமும் பறந்து விட்டது. இன்று அவர் புதிதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கிக் கொண்டதால் பழைய உறவு இப்பொழுது செங்கல் சுவர் போல் கண்களுக்கு காட்சியளிக்கிறது. ஆனால் கணக்கு போட்டு வாழ்வதைவிட காதலுடன் வாழ்வது சிறந்தது என்று நான் முடிவெடுத்ததால் தான் இந்த நிலையில் இருக்கின்றேன்" என்றார்.
கெனிஷாவின் பதிலடி
நடிகர் ரவி மற்றும் கெனிஷாவின் கிசுகிசுக்களுக்கு முன்னதாகவே கெனிஷா யூடியூபில் நிறைய இன்டர்வியூக்கள் கொடுத்திருந்தார். அதில் ஒன்றில் உங்கள் வாழ்க்கையில் சோல்மேட் இருக்கிறார்களா என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு கெனிஷா கொடுத்த பதில், "எனக்கு என்னுடைய பெண் தோழி ஒருவர் தான் சோல்மேட். அதுபோக சமீபத்துல அறிமுகமான இன்னொருத்தர் என்னுடைய சோல்மேட் ஆக நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார். அவர் அப்போது கூறியது ரவி மோகனைத்தான் என்று பொருள் பட, அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

தற்போது ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு கெனிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "வாழ்வில் வெல்ல வேண்டும் என்ற கனவுகள் கொண்டவர்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று ஆதரவான துணை கிடைப்பார்கள் அல்லது துணையே இல்லாத வாழ்க்கை தான் கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரவி மோகன் மற்றும் கெனிஷாவைப் பற்றி அவதூறு பேசுபவர்களுக்கு எதிராகவும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார் கெனிஷா.