தேனி மவட்டம் அல்லி நகரத்தில், ஹோட்டலில் ஓசி பரோட்டா சாப்பிடுவதற்காக இரண்டு நண்பர்கள் போட்ட திகில் திட்டத்தால் அல்லி நகரமே ஆடிப்போயுள்ளது.
அல்லி நகரத்தில், சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார் சரவணன். கடந்த சனிக்கிழமை (8 டிசம்பர்) இரவு ஹோட்டலுக்கு வந்த நித்தியானந்தம் மற்றும் அவரது நண்பர் இருவரும் சரவணனிடம் பரோட்டா ஆர்டர் செய்து சாப்பிடத் தொடங்கினார்கள்.
நண்பர்கள் இருவரும் சில பல பரோட்டாக்களை உள்ளே தள்ளி வயிறு முட்ட சாப்பிட்ட பின், கடைசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த பரோட்டாவில் 'தலை முடி' இருப்பதாக சொல்லி சரவணனை அழைத்து இலையில் சால்னாவில் முங்கிக் கிடந்த சில பரோட்டா துண்டுகளை காட்டினார்கள்.
இலையை பார்த்த ஹோட்டல் முதலாளி சரவணனுக்கு அதிர்ச்சி(!) நித்யானந்தமும் அவரது நண்பரும் சொன்னது போல், அவர்களது இலையில் சால்னாவில் குளித்த பரோட்டா துண்டுகளுக்கு நடுவில் கொத்தாக 'தலை முடி' கிடந்துள்ளது.
சட்டென தங்கள் பாக்கெட்டுகளில் இருந்து செல்போன்களை எடுத்த நித்யானந்தமும் அவரது நண்பரும் வேக வேகமாக ஹோட்டல் முதலாளி சரவணனின் அதிர்ச்சியையும், சால்னாவில் குளித்த பரோட்டா மற்றும் 'தலை முடி' கொத்தையும் தங்கள் செல்போன் கேமராக்களால் கவர் செய்யத் தொடங்கினார்கள்.
பதறிப்போன் சரவணன், "ஐயா ராசா... தெரியாம நடந்துடிச்சு... இனி இது மாதிரி நடக்காது... துரைங்களுக்கு புதுசா பரோட்டா தர்றேன்..." என கெஞ்சியபடி, நித்யானந்தம் மற்றும் அவரது நண்பரின் இலைகளை மொத்தமாக எடுத்து விட்டு, புது இலைகளைப் போட்டு புதிதாக பரோட்டாக்களை பரிமாற, தனது ஹோட்டல் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
"இதுதான் நீ ஹோட்டல் நடத்தும் லட்சணமா? இப்ப நாங்க பார்த்ததால தப்பிச்சோம்... ஆனா, கவனிக்காம எத்தன பேர் பூச்சி, பல்லி, பாம்பு, டைனோசர் என கண்டததையும் பரோட்டவோட சேத்து கொளப்பி அடிச்சிருப்பாங்க? அவங்களுக்கு ஏதுன்னா ஆச்சின்னா... உங்கொப்பனா காப்பாத்துவான்.." என உணவுக் கட்டுப்பாட்டு வரிய அதிகாரிகல் போல் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக பேச தொடங்கியுள்ளனர்.
நித்யானந்தன் அண்ட் கோ-வின் மிரட்டலால் டரியலான ஹோட்டல் உரிமையாளர் சரவணன், "ஐயா! மன்னிச்சிடுங்க... நீங்க காசு கூட குடுக்க வேண்டாம். இந்த பிரச்சினையை இத்தோட விட்டுடுங்க.... " என கதறி கெஞ்சியுள்ளார்.
"அதெப்டி முடியும்? உன்னை காலையில கவனிச்சுக்கிறோம். Food Safety Officer-ஐ கூட்டிட்டு வந்து, காலையில கடைக்கு ஷ்ட்டர போடாம விடமாட்டோம்." என கொக்கரித்தபடி, தங்கள் செல்போனில் பதிவாகியிருந்த 'மயில்' வீடியோவை காட்டியபடி, பரோட்டாவிற்கு பில்லை கொடுக்காமல் நடையை கட்டினர் நித்யானந்தம் அண்ட் கோ.
"அச்சச்சோ... போச்சே.. . போச்சே... போட்ட முதல் எல்லாம் போச்சே... Food Safety Officer வந்து பூட்ட போட்டுட்டா என்ன செய்யுறது?" என பதறிய ஹோட்டல் ஓனர் சரவணன், எப்படி பரோட்டாவில் அவ்வளவு கொத்தாக முடி வந்தது? என கண்டறிய, தன் ஹோட்டலில் மாட்டியிருந்த CCTV கேமராவில் பதிவான வீடியோக்களை பார்வையிட்டார்.
CCTV கேமராவில் பதிவாகியிருந்த நித்யானந்தத்தின் 'தகிடுதத்த' வேலையை பார்த்து அதிர்ந்து போனார் சரவணன். ஹோட்டலுக்குள் நுழைந்த நித்யானந்தம் அண்ட் கோ, சில பல ப்ரோட்டாக்களை ஆர்டர் செய்து, சல்னாவில் முக்கி உள்ளே தள்ளியதும், கடைசியாக ஒரு ப்ரோட்டாவை வாங்கி பிய்த்து இலையில் போட்ட பின், யாரும் கவனிக்காத நேரத்தில் தனது சட்டைக்குள் கையை விட்டு 'மார்பு' முடியை கொத்தாக பிய்த்து பரோட்டா இலையில் போட்டதும் CCTV கேமராவில் பதிவாகியிருந்தது. தொடர்ந்து, நிந்தாயனந்தம் அண்ட் கோ-வின் நியாயம் கேட்கும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.
மொத்த வீடியோவையும் பார்த்த ஹோட்டல் ஓனர் சரவணன் சாமியாடாத குறையாக, தேனி மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன் முருகனுக்கு போனைப் போட்டார்.
அடுத்த நாள் காலையில், சரவணனின் ஹோட்டல் CCTV காட்சிகளுடன், தேனி மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன் முருகன், ஹோட்டல் ஓனர் சரவணன், மற்றும் பல ஹோட்டல் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், ஆதாரங்களை பார்த்து உடனடி நடவடிக்கை எடுக்க அல்லி நகர காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
CCTV காட்சிகளை ஆய்வு செய்த அல்லி நகர போலிஸ் நித்யானந்தத்தை அடையாளம் கண்டு அவரது வீட்டிலேயே சென்று கொத்தாக தூக்கிக்கொண்டு வந்து விட்டனர்.
அல்லி நகரத்தில் ஒரு முக்கிய அரசியல் கட்சியில் முக்கிய பிரமுகராக இருக்கும் நித்யானந்த்தம், சம்பவம் நடந்த இரவிற்கு முதல் நாள் (வெள்ளி கிழமை - 6 டிசம்பர்) இரவு சரவணனின் ஹோட்டலுக்கு வந்து, "ஓசியில் கொஞ்சம் குழம்பு கிடைக்குமா?" எனக் கேட்ட நித்யானந்தத்திடம், "காசு இல்லாமல், கால் கரண்டி குழம்பு கூட கிடைக்காது!!!" என கத்தி அனுப்பியுள்ளார் சரவணனன்.
காண்டான நித்யானந்தம், கால் கரண்டி குழம்பு கிடைக்காத அவமானத்தால் இரவு முழுக்க தூக்கம் வராமல் தவித்துள்ளார். தன்னை அவமானப்படுத்தி, தூக்கத்தை பறித்த சரவணனை பழிவாங்க முடிவு செய்து, இரவு முழுதும் தூங்காமல் திட்டமிட்டு, அடுத்த நாள் இரவு தன் நண்பருடன் சரவணனின் ஹோட்டலுக்கு வந்து தன் 'கொடூர' திட்டத்தை நிறைவேற்றி சரவணனை ஒரு நாள் இரவு முழுதும் தூங்க விடாமல் செய்து தன் பழிவாங்கல் திட்டத்தை நிறைவேற்றி விட்டதை போலிசாரின் விசாரணையில் விலாவரியாக ஒப்புவித்தார் நித்யானந்தம்.
நித்யானந்தத்தின் பலே திட்டத்தை கேட்டு திகிலில் உறைந்து போன அல்லி நகர போலிஸ் இதற்கு என்ன டைப் கேஸ் போடுவதென தெரியாமல் சட்ட புத்தகங்களை சல்லடை போட்டு அலசிக் கொண்டுள்ளனர்.