"இந்த மீன் கடற்கரையில் ஒதுங்கினால் உலகத்தில் பேரழிவு நிச்சயம்" என்று 'டூம்ஸ்டே ஓர்ஃபிஷ்' என்கின்ற அரிய வகை மீனை ஜப்பானிய புராணங்களின்படி மக்கள் நம்புகின்றனர். இந்த மீனுக்கு "கடல் கடவுளின் தூதர்" என்ற மற்றொரு பெயரும் உண்டு. பெரும்பாலும், வரப்போகும் பேரழிவுகளின் அறிகுறியாக இந்த மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குமாம். 17ஆம் நூற்றாண்டில் இருந்தே இந்த கட்டு கதையை மக்கள் நம்பி வருகின்றனர்.
ஓர்ஃபிஷ் மீன் நீங்கள் வழக்கமாக பார்க்கும் மீன்கள் போன்று இல்லாமல் ரிப்பன் போன்று நீளமாக சில்வர் நிறத்தில் இருக்கும். சுமார் 9 முதல் 10 அடி நீளம் கொண்டவை. அகலமான கண்கள் கொண்ட இந்த அரிய வகை மீன் ஆழ்கடலில் இருப்பதால் பொதுவாக கரைக்கு வருவதில்லை. அதனால் இவைகளை பார்ப்பதே அரிதான ஒன்றாகும்.
தற்போது இந்த 'டூம்ஸ்டே ஓர்ஃபிஷ்' மீன் மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. Robert Hayes என்பவர் கடற்கரையில் ஓர்ஃபிஷ் மீன் ஒன்று தத்தளிக்கும் காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தத்தளிக்கும் மீனை எடுத்துக் கொண்டு சென்று கடலுக்குள் விட்டாலும், அது மீண்டும் மீண்டும் கரைக்கே வந்தது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் முழுக்க முழுக்க ஓர்ஃபிஷ் கரை ஒதுங்கிய செய்தி தீயாய் பரவியுள்ளது. ஆழ்கடலில் மட்டுமே காணப்படும் அந்த மீன் கடல் பரப்புக்கு வந்துள்ளதால், பூமிக்கு ஏதோ ஒரு பெரிய அழிவு காத்திருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். ஏனெனில், ஏற்கனவே ஓர்ஃபிஷ் மீன் செத்து கரை ஒதுங்கிய போது இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன.
எடுத்துக்காட்டாக 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியை கூறலாம். இந்த நிகழ்வு ஏற்படுவதற்கு முன் சுமார் 20 'டூம்ஸ்டே ஓர்ஃபிஷ்' மீன்கள் கரைக்கு வந்துள்ளன. உலக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் 9.1 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவான பயங்கர நிலநடுக்கம் ஜப்பான் மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது யாராலும் மறக்க முடியாது. மீன் செத்து மிதப்பதற்கும் சுனாமிக்கும் என்னடா சம்பந்தம் என்று கேட்டால், விஞ்ஞானிகள் அதற்கு பல கோட்பாடுகளை முன் வைத்துள்ளனர்.
விஞ்ஞானிகள் கூறுவது, ஓர் ஃபிஷ் போன்ற ஆழ்கடல் மீன்கள் ஆயிரம் அடிக்கு கீழ் இருக்கிறது. நில அதிர்வு போன்றவை ஏற்படும் போது மீன்களுக்கு அதிக உணர்திறன் ஏற்படுகிறது. ஏனெனில் இவ்வகை மீன்கள் பிளவு கோடுகளுக்கு அருகில் வாழ்கின்றன. அதிக உணர்த்திறன் காரணமாக மீன்கள் பூகம்பத்திற்கு முன்பு மேற்பரப்புக்கு வர வழிவகுக்கும் என்கின்றனர்.
வேறு சில விஞ்ஞானிகள் இது ஒரு தற்செயலான நிகழ்வு என்றும் சக்தி வாய்ந்த நீரோட்டங்கள் அல்லது நோயால் பாதிக்கப்பட்டால் மட்டுமே அவை மேற்பரப்பிற்கு தள்ளப்படுகின்றன என்று கூறுகின்றனர். அமெரிக்காவில் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கூட, ஜப்பானில் மீன்கள் கரை ஒதுங்கியதற்கும், பூகம்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இருந்தும் இது குறித்து சமூக வலைதளங்களில் டூம்ஸ்டே மீன்களைக் குறித்த தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. ஒரு சிலர் நிலநடுக்கம் அல்லது சுனாமி போன்ற பேரழிவு இந்த ஆண்டு கண்டிப்பாக நிகழவிருப்பதாக மக்களுக்கு அதிர்ச்சியூட்டும்படி பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில், வேறு சிலர் இதனை மறுத்தும் கூறுகின்றனர்.
சற்று யோசித்துப் பார்த்தால், பூகம்பத்தால் மட்டுமா மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது? கடல் மாசுபடுவது, இரு நாடுகளுக்கும் இடையேயான போர், ஏவுகணை தாக்குதல் போன்ற நடவடிக்கைகளாலும் கூட உயிர்கள் பறிக்கப்படுகின்றன. இவைகள் தடுக்கப்பட்டாலே உலகில் பாதி பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு கண்டுவிடும்.