வரலாற்றில் நாம் அதிகமாக உயிருடன் புதைக்கப்பட்ட கதைகளை பற்றி கேட்டிருப்போம். ஏனெனில் மருத்துவம் அந்த காலங்களில் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. இன்று இருக்கும் காலகட்டங்களில் சாதாரணமாக காய்ச்சல், தலைவலி மற்றும் சளி தொந்தரவுக்கு எளிதாக வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக் கொள்கிறோம். சொல்லப்போனால் இவைகள் மிக குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் தான். ஆனால், பழங்காலங்களில் ப்ளேக் போன்ற காய்ச்சல் ஒருவருக்கு வந்தாலும் அது மற்றவர்களுக்கு தொற்றி விடுமோ என்று பயந்து நோய்வாய்ப்பட்டவர்களை உயிருடன் புதைத்து விடுவார்கள்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் கூட அவர் இறப்பதற்கு முன்பு "நான் இறந்து விட்டால் மூன்று நாட்கள் கழித்தே என்னை அடக்கம் செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். ஏனெனில், பழங்காலங்களில் உயிருடன் புதைக்கப்பட்டு மீண்டும் அவர்கள் உயிர்த்தெழுந்து வந்த சம்பவங்கள் ஏராளம்.
1700 களின் காலகட்டம் மிக மோசமானது. ஏதாவது ஒரு வகையில் காசு சம்பாதிக்க மக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக கல்லறை கொள்ளைக்காரர்களின் அட்டூழியம் அதிகமானது. யாராவது இறந்து விட்டால் அவர்களின் கல்லறையைத் தோண்டி அவர்கள் அணிந்திருக்கும் அணிகலன்களை திருடிக் கொள்வார்கள். இது ஒரு வகை கொள்ளைக்காரர்கள். இன்னொரு வகை கொள்ளைக்காரர்கள் மொத்த சடலத்தையும் ஆட்டையை போட்டு அதை மருத்துவ கல்லூரிகளுக்கு விற்று விடுகின்றனர். இதன் மூலம் பெருமளவில் காசு பார்க்கலாம் என்பதனால் கல்லறை கொள்ளைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமானது.
இந்த வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானவர்கள் 'பர்க்' மற்றும் 'ஹேர்' ஆவர். அவர்களின் புகழ் உண்மையில் அவர்களின் கல்லறை கொள்ளையின் காரணமாக இல்லை. அவர்களிடம் ஒவ்வொரு முறையும் பிரஷ் ஆன சடலத்தை பலரும் ஆர்டர் செய்வது வழக்கம். வெறும் கொள்ளை மட்டும் இல்லாமல் பேராசையில் கொலை செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால், 1700 காலகட்டம் மிகவும் மோசமானது என்றே சொல்லலாம்.
ஐரோப்பா முழுவதும் பரவிய ஒரு பிரபலமான கதை அயர்லாந்தைச் சேர்ந்த மார்கோரி மெக்காலின் என்ற பெண்ணைப் பற்றி விவரிக்கிறது. அவரது கல்லறையில் "மார்கோரி மெக்கால்-ஒருமுறை வாழ்ந்தார், இரண்டு முறை புதைக்கப்பட்டார்" என்று எழுதப்பட்டிருக்கும். காரணம், 1695 ஆம் ஆண்டில் மார்கோரிக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர் ஒரு மருத்துவர். மார்கோரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரது கணவர் மார்கோரி இறந்துவிட்டதாக நினைத்து அடக்கம் செய்துவிட்டனர். ஆனால் உண்மையில் மார்கோரி சாகவில்லை. அவர் உயிரோடு புதைக்கப்பட்டார்.
மார்கோரி கையில் தனது கல்யாண மோதிரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விலைமதிப்புள்ள தங்க மோதிரமாக இருந்தாலும் மார்கோரியின் கணவருக்கு அதனை அகற்ற விருப்பமில்லாமல் அப்படியே அடக்கம் செய்து விட்டார். மோதிரத்தை பற்றிய கிசுகிசுக்கள் மக்களிடம் தீயாய் பரவியது. இதனை தெரிந்து கொண்ட கல்லறை கொள்ளையர்கள் இரண்டு பேர் எப்படியாவது அந்த மோதிரத்தை திருட திட்டமிட்டு மார்கோரியை புதைத்த இடத்திற்கு ஒருநாள் இரவு சென்றனர்.
அவரது உடல் சூடாகவும், சவப்பெட்டியின் உட்புறத்தில் கீறல்கள் இருந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர். இருப்பினும், வந்த வேலையை மட்டும் முடித்துவிட்டு போகலாம் என்று மார்கோரியின் கையில் இருந்த மோதிரத்தை கலற்ற ஆரம்பித்தனர். அதில் ஒருவன் "கலட்டுவதற்கெல்லாம் இங்க நேரமில்ல, வெட்டி எடுத்துட்டு போயிடலாம்" என்று கூற உடன் இருந்த இன்னொருவன் கத்தியால் மார்கோரியின் விரலைத் துண்டித்தான். வலியால் துடித்த மார்கோரி சவப்பெட்டியில் இருந்து எழுந்து உட்கார்ந்து அழுக ஆரம்பித்து விட்டாள். இறந்த பிணம் உயிரோடு எழுந்து உட்கார்ந்ததை பார்த்ததும் பீதியில் கொள்ளையர்கள் இருவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
மார்கோரியின் விரல் வெட்டப்பட்டதால் வலியோடு மெதுவாக தனது குடும்பத்தினரை பார்க்க வீட்டிற்குச் சென்றாள். வீட்டில், அவரது கணவர் ஜான் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் துக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தார். மார்கோரி வீட்டின் கதவை வேகமாக மூன்று முறை தட்டினார். ஜான் குழந்தைகளிடம் "உன் அம்மாவிற்கு நாம் வருத்தப்படுவது தெரிந்திருந்தால் இது அவராகத்தான் இருக்கும்" என்று கூறிவிட்டு கதவை திறக்க சென்றார். கதவைத் திறந்ததும், விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், ரத்தம் வலிய முகத்தில் கீரல்களோடு தனது இறந்த மனைவி உயிரோடு நிற்பதைக் கண்டதும் அதிர்ச்சியில் கீழே விழுந்து விட்டார் ஜான்.
அப்போதைய சில செய்தி தாள்களில் வெளிவந்த செய்தி என்னவென்றால், ஜான் மார்கோரியை கண்டதும் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அப்போது உறவினர்களுக்கு மார்கோரி உயிரோடு இருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா, இல்லை ஜான் இறந்ததை நினைத்து துக்கப்படுவதா என்று தெரியவில்லை. மார்கோரியை புதைத்த அதே இடத்திலேயே அவரது கணவரை அடக்கம் செய்தனர்.
மார்கோரி மீண்டும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார். அவர் இறந்த பின் கல்லறையின் மேல் "மார்கோரி மெக்கால்-ஒருமுறை வாழ்ந்தார், இரண்டு முறை புதைக்கப்பட்டார்" என்று எழுதப்பட்டது. இறந்த பின்னரும் லுர்கன் நகர மக்கள் மனதில் நினைவில் இருந்து கொண்டிருக்கிறார் மார்கோரி.