ஸ்காட்லாந்தின் ஈடின்பர்க்கில் உள்ள 'மேகி டிக்சன்ஸ் பப்' என்ற மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பெயரின் வரலாற்றை பற்றி தெரியாமலேயே பலரும் இந்த இடத்திற்கு வந்து செல்கின்றனர். ஸ்காட்லாந்தின் மிகவும் மோசமான குற்றக்கதைகளில் இடம் பெற்ற ஒரு பெண்ணுக்கு பப்பின் பெயர் மரியாதை செலுத்துகிறது என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. குறிப்பாக வார இறுதி நாட்களில் கிடைக்கும் ஸ்பெஷல் உணவுக்காக பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகம் வருவது வழக்கம். இந்த இடத்திற்கு எதனால் இந்த பெயர் வந்தது என்ற கதைதான் மிகவும் சுவாரசியமானது.
மேகி டிக்சன் 1702 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் முசெல்பர்க்கில் உள்ள மீனவர் குடும்பத்தில் பிறந்தாள். மேகியின் தந்தை ஒரு குடிகாரர் என்பதால் சிறுவயதில் இருந்தே தனது அம்மா எவ்வளவு துன்புறுத்தல்களை அனுபவித்துள்ளார் என்பதை கண்கூடாக பார்த்தவள்.
அக்காலகட்டங்களில் பெண்கள் தனது கணவருக்கு அடிபணிந்து வேலை செய்யவும் மற்றும் குழந்தைகளை பெற்றுக் கொள்ள மட்டுமே எதிர்பார்க்கப்பட்டனர். மேகி மட்டும் அதில் விதிவிலக்கல்ல.
தனது அம்மாவைப் போலவே மேகியும் ஒரு மீனவரை திருமணம் செய்து கொண்டாள். இவளது திருமண வாழ்க்கையும் கசப்பாகவே அமைந்தது. மேகியின் கணவர் அடிக்கடி குடித்துக் கொண்டு வந்து துன்புறுத்துவார். திடீரென்று ஒரு நாள் அவளது கணவர் வெளி ஊருக்கு சென்று நீண்ட நாட்களாக திரும்பவில்லை. தனது இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வந்த மேகிக்கு சோதனை காலம் ஆரம்பித்தது. சாப்பாட்டிற்கே வழி இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள். எப்படியாவது தனது இரண்டு குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று கிடைத்த வேலைக்குச் சென்று வந்தாள். மேகி பார்ப்பதற்கு எளிதாக ஆண்களை கவரும் அளவிற்கு அழகான தோற்றம் உடையவள். அதனால் எளிதாக தங்கும் விடுதி ஒன்றில் வேலை கிடைத்து பணியாளராக வேலை பார்த்து வந்தாள்.
சில மாதங்களிலேயே விடுதி உரிமையாளரின் மகனோடு தொடர்பு ஏற்பட்டு கர்ப்பம் ஆகினாள். வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தாள் மேகி. ஆனால் அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை ஐந்து மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்து இறந்து விட்டது. மேகிதான் இந்த குழந்தையை கொன்று விட்டாள் என்று பலரும் பேச, அவளை குற்றவாளி என்று கைது செய்து விட்டனர். குழந்தையை கொன்ற காரணத்திற்காக மேகிக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. "குழந்தையின் இறப்பிற்கு நான் காரணம் இல்லை; கர்ப்பமாக இருப்பது வெளியே தெரிந்தால் பெரும் அவமானம் ஆகிவிடும் என்று எண்ணி மறைத்து வைத்திருந்தேனே தவிர குழந்தையை கொல்லவில்லை" என்று எவ்வளவோ மண்டியிட்டு போராடியும் மேகியால் ஜெயிக்க முடியவில்லை. அனைத்து சூழ்நிலைகளும் அவளுக்கு எதிராகவே அமைந்துவிட்டது.
சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தூக்கு தண்டனை நிறைவேற்றும் நாள் வந்தது. எப்படியாவது தப்பித்து விட மாட்டோமா என்ற யோசனை மட்டுமே மேகியின் நினைவில் இருந்தது. ஆகஸ்ட் 2, 1724 அன்று மேகி ஈடின்பர்க்கின் கிராஸ் மார்க்கெட்டில் தூக்கில் இடப்பட்டாள். ஆனால் அதிர்ஷ்டவசமாக, அனைவரும் திகைத்துப் போகும்படி தூக்கிலிட்ட பிறகும் உயிர் தப்பினால் மேகி.
மேகி தூக்கு தண்டனையில் இருந்து எப்படி தப்பித்தால் என்று பலவிதமாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன. தூக்கிலிடப் போகும் நபரோடு மேகிக்கு தொடர்பு ஏற்பட்டு, தனது அழகால் அவரை மயக்கி இருப்பாள் என யூகிக்கப்பட்டது. பிறகு, அந்நநபர் திட்டமிட்டபடியே கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றை இறுக்கமாக கட்டாமல் விட்டிருக்கலாம். அதனால் தூக்கிலிடப்பட்ட பிறகும் மேகிக்கு வெறும் மயக்கம் மட்டுமே ஏற்பட்டு அவளை சவப்பெட்டியில் வைத்திருக்கலாம் என்று பேசப்பட்டது. உயிரோடு சவப்பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தாலும் அவள் இறந்து போவதற்கான சாத்தியக்கூறு ஒன்று உள்ளது. 1700 களின் காலகட்டத்தில் பொதுவாகவே குற்றவாளிகளின் சடலத்தை அப்பொழுதே நேரடியாக மருத்துவ கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஒருவேளை மேகி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் அவள் உயிர் பிழைத்திருப்பதற்கான சாத்திய கூறுகள் முற்றிலும் இல்லாமல் போயிருக்கும்.
நல்ல வேலையாக சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட பிறகு மேகி அவளது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவளது உடன் பிறந்த தம்பி முசல்பர்க்கில் உள்ள கல்லறையில் முறையாக அடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரோடு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சவப்பெட்டியிலிருந்து ஒரு சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என்று அங்கிருந்த எவருக்கும் புரியவில்லை. உடனே அவர்கள் சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது அனைவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. இறந்து விட்டதாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட மேகி உயிரோடு எழுந்து உட்கார்ந்தாள்.
ஸ்காட்லாந்தின் சட்ட முறைப்படி ஒரு முறை தூக்கிலிடப்பட்ட நபரை மறுமுறை தூக்கிலிடுவது குற்றம். அதனால் மேகி மீண்டும் சிறைக்குச் செல்லாமல் தனது அன்றாட வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள். தனக்கு கிடைத்த மறுவாழ்வை நினைத்து தினம் தோறும் கடவுளுக்கு நன்றி சொல்லி வழிபாடு செய்து வந்தாள். தனது கணவருடன் மீண்டும் மகிழ்ச்சியோடு இணைந்து மேலும் பல குழந்தைகளை பெற்றெடுத்தாள். 1765 ஆம் ஆண்டு இவ்வுலகையை விட்டு மறைந்தாள் மேகி டிக்ஸன்.
பெரும் பிரபலமாகிய மேகி, இறந்த பின்னரும் அனைவராலும் "ஹாஃப் ஹாங்கிட் மேகி" (Half-hangit maggie) என்று அன்பாக அழைக்கப்பட்டு வருகிறாள். அவளது நினைவாகவே ஈடின்பர்க்கில் உள்ள பப் ஒன்று மேகியின் பெயரில் "மேகி டிக்சன்ஸ் பப்" இன்றும் இயங்கி வருகிறது.