"பிளான்சே மோனியர்" பிரான்ஸ் நாட்டின் போய்டியர்ஸைச் சேர்ந்த ஒரு அழகான இளம் பெண். இவர் 1849 ஆம் ஆண்டு இமெயில் மற்றும் லூயிஸ் ஆகியோருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தாள். மோனியர் கும்பம் சமூகத்தில் மிகவும் செல்வ செழிப்போடும், நற்பெயரோடும் மரியாதைக்குரியவர்களாக வாழ்ந்து வருபவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே போய்டியர்ஸ் நகரம் உருவாவதற்கு ஒருங்கிணைந்தவர்களில் இவர்களும் ஒன்று. சமூகத்தில் புகழ்பெற்ற உறுப்பினர்களாக நடுத்தர உயர்-வர்க்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நகரத்தில் மக்களால் விரும்பக்கூடிய "வாழ்ந்தா இப்படி ஒரு வீட்ல வாழனும் டா" என்று சொல்லும் படியான ஆடம்பரமான மூன்று அடுக்கு மாடி அரண்மனையில் வசிக்கின்றனர்.
இதில் மக்களால் விரும்பப்படாத ஒன்று என்னவென்றால் பிளான்சேவின் அம்மா லூயிஸ் மட்டுமே. எந்நேரமும் அவர்கள் வீட்டில் இருந்து கூச்சலிடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு லூயிஸ் மற்றவர்களிடம் மிகவும் கோபமாக அதிகாரத்தோடு நடந்து கொள்வார். இது வேலைக்காரர்களிடம் மட்டுமல்ல, அவரது குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுடனும் குறிப்பாக இளம் பிளான்சே உடன் அடிக்கடி கூச்சலிட்டு சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்.
தனது அம்மாவிற்கு மாறாக பிளான்சே மென்மையான குணம் கொண்டவள். இவள் ஒரு சமூக ஆர்வலர் மட்டுமின்றி பியானோ வாசிப்பதில் அதீத திறமை கொண்டவள். செல்வ செழிப்போடு சமூகத்தில் நல்ல பெயரோடு வாழ்ந்து வந்தாள். எதையும் யாரிடமும் வெளிப்படையாக பேசும் குணம் உண்டு. அதனாலேயே அனைவராலும் மிகவும் கவரப்பட்ட பெண்ணாக, குறிப்பாக போயிட்டியெர்ஸ் நகரத்தில் பிளான்சேவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்காத ஆண்களே இல்லை. அந்த அளவிற்கு அழகும் திறமையும் கொண்டவள்.
லூயிஸின் அம்மாவிற்கு இவள் அனைவரிடமும் வெளிப்படையாக இருப்பது பிடிக்கவில்லை. இப்படி நடந்து கொண்டால் சமூகத்தில் பெரும் அந்தஸ்தோடு இருக்கும் குடும்பத்திலிருந்து கல்யாணம் செய்து கொள்வது சாத்தியம் இல்லை என்று அடிக்கடி கூறுவார்.
பிளான்சேவின் 20 வயதில் இருந்து பல ஆண்கள் அவளை திருமணம் செய்து கொள்ள நினைத்தார்கள். ஆனால், பிளான்சே வழக்கறிஞராக பணிபுரியும் கீழ்த்தர வர்க்கத்தை சேர்ந்த, அதிக வயதுடைய ஒருவரையே விரும்பினாள். பெரிதும் அந்தஸ்தோ காசு பணமோ இல்லாத ஒரு நபர். பிளான்சே தனது காதலைப் பற்றி அம்மாவிடம் கூறினாள். லூயிஸ் நினைத்தது போலவே தனக்கு பிடிக்காத மற்றும் சமூகத்தில் அந்தஸ்து இல்லாத ஒரு ஆணை காதலிப்பது அவளை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
லூயிஸ் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது அதற்கு பிளான்சே சம்மதிக்கவில்லை. ஒவ்வொரு நாள் இரவும் திருட்டுத்தனமாக வீட்டிற்கு தெரியாமல் காதலனை சந்திக்க சென்று வருவாள். இதை அறிந்த நகர மக்கள் அவளை அவதூறு கூறினர். லூயிஸ் இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள். வருடம் 1875, பிளான்சே வழக்கம் போல தனது காதலனை பார்க்க வெளியே சென்று விட்டு வீடு திரும்பினாள். அதுவே அவள் கடைசியாக வீட்டை விட்டு வெளியே சென்ற நாள். அதன் பிறகு 25 வருடங்களாக சொந்த வீட்டிலேயே, சரியான உணவு, தண்ணீர் கூட இல்லாமல் தனது அம்மாவால் கொடூரமான முறையில் சிறை வைக்கப்பட்டாள்.
பிளான்சே எங்கு சென்று விட்டால் என்று நகர மக்களுக்கு கேள்வி எழுந்தது. ஆனால் அவர்களாகவே படிப்பிற்காக வெளியூர் சென்று இருப்பாள் என்று யூகித்துக் கொண்டனர். பிளான்ச்சேவின் காதலனான வழக்கறிஞர் நீண்ட நாட்களாக பிளான்சேவை காணவில்லை என்பதால் நேரடியாக வீட்டிற்கு வந்து விசாரித்த போது லூயிஸ் அவரை மதிக்காமல் "பிளான்ச்சேவிற்கு பைத்தியம் பிடித்து விட்டது, அதனால் அவளை மனநல காப்பகத்தில் சேர்த்து விட்டோம்" என்று கூறி அவரை திருப்பி அனுப்பி விட்டாள். பல வருடங்கள் கழித்து அவரும் பிளான்சேவிற்கு என்ன ஆனது என்று தெரியாமலேயே இறந்து விட்டார்.
25 வருடங்களாக வெளி உலகத்தோடு தொடர்பு இல்லாமல், அவ்வப்போது மட்டுமே கிடைக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, மெலிந்த உடலோடு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள் பிளான்சே. காலப்போக்கில் நகர மக்களும் பிளான்சே என்ற பெண் இருந்ததையே மறந்து விட்டனர்.
1901 ஆம் ஆண்டு பிரான்சின் காவல் நிலையத்திற்கு ஒரு மொட்டை கடுதாசி வந்திருந்தது. அதில், "இது ஒரு முக்கியமான விஷயம். மோனியர் வீட்டில் பட்டினியோடு, சாப்பாடு இல்லாமல், குப்பையால் சூழப்பட்ட அறையில், பல வருடங்களாக பூட்டப்பட்டு ஒரு பெண் வாழ்ந்து வருகிறாள்" என்ற செய்தி அட்டார்னி ஜெனரலுக்குக் கிடைத்தது.
உடனே காவல்துறையினர் மோனியர் இல்லத்திற்கு சென்றனர். பளிச்சென்று இருக்கும் அந்த அரண்மனையில் ஒரு ஜன்னல் மட்டும் குப்பை படிந்து, கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. உள்ளே சென்ற காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்ட பிறகு அந்த குறிப்பிட்ட அறைக்கு சென்று தேடினர். அந்த அறையை நெருங்க நெருங்க மோசமான வாடை அதிகரித்தது. அறையினுள் நுழைந்து பார்த்த அனைவருக்குமே பேரதிர்ச்சி. அறையைச் சுற்றிலும் மலம், இறைச்சி துண்டுகள், காய்கறிகள், மீன் மற்றும் அழுகிய ரொட்டி ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தது. மெலிந்த உடலோடு உடலில் தசைகள் இல்லாமல் மோசமான தோற்றத்தோடு பிளான்ச்சேவை கண்ட அனைவருமே வாய் அடைத்துப் போயினர். இந்த நிலைக்கு காரணமான பிளான்சேவின் அம்மா லூயிஸ் மற்றும் அவளது அண்ணன் மார்சல் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பிளான்ச்சேவிற்கு தேவைப்பட்ட அனைத்து உதவிகளும் அரசாங்கம் வழங்கியது. என்னதான் உடல்நலம் தேறி மீண்டு வந்தாலும், மனநிலை மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாள். மோசமான சுற்றுச்சூழலில் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் இருந்தாலும், அவளை கவனித்துக் கொண்ட ஊழியர்கள் பிளான்ச்சே மிகவும் அமைதியாகவும் மென்மையாகவும் இருந்ததாக கூறினர். தான் மீதி வாழ்ந்த நாட்களையும் மனநல காப்பகத்திலேயே முடித்துக் கொண்டாள் பிளான்ச்சே. ஏற்பட்ட அநீதிக்கு நீதி கிடைத்திருந்தாலும் பிளான்சே தனது வாழ்நாளில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.